Friday, October 19, 2012

வாழி எதிராசன் வாழி எதிராசன்

அது 2004ஆம் வருடம்.   ஶ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி  அமெரிக்காவிற்கு உபன்யாசம் செய்வதற்காக வந்திருந்த சமயம்.  அன்று அவர் வர்ஜினியாவில் உபன்யாசம் செய்யும் நாள்.  இப்பொழுது போல் அல்லாமல், ஒரே ஒரு நாள் இரவு மட்டுமே உபன்யாசம்.  அதுவும் அவர் நியு ஜெர்சியிலிருந்து வரவேண்டும்.  உபன்யாசம் முடித்துவிட்டு மீண்டும் நியு ஜெர்சி செல்ல வேண்டும்.  உபன்யாசத்திற்காக் ஒதுக்கப்பட்டிருந்த நேரம்  மாலை  6 மணி முதல் இரவு  ஏழரை வரை.  உபன்யாச நாயகர் "ஸ்வாமி மணவாள மாமுனிகள்".  சோதனையாக அன்று என் மகனின் பள்ளியில் "சுற்றுலா தினம்".   அது முடியும் போது மணி ஐந்து.  நாங்கள் இருப்பது மேரிலாந்தில்.  எங்கள் இடத்திலிருந்து வர்ஜினியா செல்வதற்கு சுமார் 45 நிமிடங்கள் ஆகும்.  மணி ஐந்து தானே, ஆறு மணிக்குள் எப்படியாவது விரைந்து சென்று விடலாம் என்று மனக்கோட்டைக் கட்டிக்கொண்டு காரில் ஏறி விரைந்தோம்.  விரைய முடியவில்லை.  அன்று வெள்ளிக்கிழமை.  வார இறுதி நாள்.  எக்கச்சக்க போக்குவரத்து நெரிசல்.  நத்தையை விட கார்கள் மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன.  இந்த நெரிசலை கடந்து ஆறு மணிக்குள் வர்ஜினியா அடைவது மிக கடினம் என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.    வர்ஜினியா கோவிலின் தொலைப்பேசி எண்ணும் எங்களுக்குத் தெரியாது.  ஸ்வாமி வந்து விட்டாரா, இல்லையா எதுவும் தெரியாது. மணி துளிகள் வேக வேகமாக நகர மனமும் வேக வேகமாக துடிக்க ஆரம்பித்தது.  மணி 6.30.  ஸ்வாமி இப்பொழுது உபன்யாசம் நிகழ்த்திக் கொண்டிருப்பார் என்று மனம் கூவிற்று.  இந்த நெரிசலைக் கடந்து நாம் வர்ஜினியா அடையும் போது உபன்யாசமே நிறைவுப் பெற்றிருக்கும் என்ற புலம்பல் வேறு.  ஒரு வழியாக நெரிசலை கடந்து நாங்கள் வர்ஜினியா கோவிலை அடையும் போது மணி 7.15.  ஸ்வாமியின் கணீர் குரல்  காதில் ஒலித்தது.  உபன்யாசம் முடியும் தருவாயில் வந்திருக்கிறோம், நமக்கு என்ன குடுத்து வைத்திருக்கிறதோ அதை கேட்போம் என்று மனதை திடப்படுத்திக்கொண்டு, காரை விட்டு இரங்கவும், ஒரு வைஷ்ணவ அடியார் எங்கள் அருகில் வந்து, " நியு ஜெர்சியிலிருந்து வரும் வழியில் சாலை நெரிசல், ஆதலால் ஸ்வாமி இப்பொழுது தான் வந்தார்," என்று கூறினார்.  உண்மையாகவே எங்கள் காதுகளில் தேன் வந்து பாய்ந்தது அன்று.

அன்று முழுக்க முழுக்க அவர் சொன்னது "ஸ்வாமி மணவாள மாமுனிகள் ப்ரபாவம்".  எங்கள் காதுகளில் முழுக்க முழுக்க விழுந்தது "ஸ்வாமி இராமானுசர் ப்ரபாவம்".  அன்று தான் "ஸ்வாமி இராமானுசர்" என்ற பெருந்தெய்வம் எங்களை பீடித்தது.  அது வரை குரங்கு குட்டிப் போல்  ஸ்வாமி இராமானுசரை நாங்கள் பற்றிக் கொண்டிருந்தோம்.  அன்று  முதல் பூனைத் தாயைப் போல் "ஸ்வாமி இராமானுசர்" எங்களைப் பிடித்துக் கொண்டார்.  எட்டு வருடங்கள் கழித்து இன்று கிருஷ்ணன் ஸ்வாமி என்ன உறையாற்றினார் என்று நினைவில்லை.  ஆனால் "ஸ்வாமி இராமானுசரை"ப் பற்றினால் தான் நமக்கு உய்வு என்று அவர் கூறியது நினைவில் உள்ளது.  "ஸ்வாமி இராமானுசரை"ப் பற்றுவதற்கு எளிய வழி "ஸ்வாமி மணவாள மாமுனிகள்" இயற்றிய "யதிராஜ விம்சதியை"க் கற்பது தான் என்று எங்களுக்கு அன்று பணித்தது நினைவில் உள்ளது.  அவர் வார்த்தையை ஏற்று, சென்னைக்கு விடுமுறையில் சென்ற போது "யதிராஜ விம்சதி"சந்தை ஆயிற்று.  ஸ்வாமி மணவாள மாமுனிகளுக்கு தெரிந்திருக்க வேண்டும், நம் காலத்திற்கு பிறகு, பல நூற்றாண்டுகள் கழித்து ஒரு ஜீவன் பிறக்கும், அந்த ஜீவனுக்காக இன்றே நாம் பாடிவைப்போம் என்று தோன்றும் வகையில் ஒவ்வோர் ஸ்லோகமும் என்னையே குறிவைப்பதுப் போல் இயற்றியுள்ளார்.  யதிராஜ விம்சதியின் பன்னிரெண்டாவது ஸ்லோகம் மிகச் சரியான உதாரணம்.

              அந்தர்பஹிஸ் ஸகலவஸ்துஷூ ஸந்தமீஸமந்த:
                     புரஸ்ஸ்திதமிவாஹமவீஷமாண:
             கந்தர்ப்பவஸ்யஹ்ருதயஸ்ஸததம் பவாமி ஹந்த
                   த்வதக்ரகமநஸ்ய யதீந்த்ர நார்ஹ:

(எம்பெருமானாரே!எல்லாப்பொருள்களிலும் உள்ளும் புறமும் ஒக்க வியாபித்துள்ள எம்பெருமானைப் பிறவிக்குருடன் தன் முன்புள்ள பொருளைக் காண இயலாததுபோல காணமாட்டாதவனாய், எப்போதும் மன்மதனுக்கு வசப்பட்டவனாய் உள்ளேன்.  அந்தோ! தேவரீர் திருமுன்பே வரவும் அடியேன் யோக்யதை அற்றவன்.)

யதிராஜ விம்சதியைப் படிக்க படிக்க நம் கதை நம் கண் முன்னே விரியும். நம் வேலையை சுளுவாக்கி, நாம் ஸ்வாமி இராமானுசரிடம் முறையிட வேண்டிய அனைத்தையும், ஸ்வாமி மணவாள மாமுனிகள் நமக்காக வேண்டியுள்ளார். கட்டாயமாக நாம் ஒவ்வொருவரும் யதிராஜ விம்சதியின் இருபது ஸ்லோகங்களையும் அதன் அர்த்தத்தோடு கற்க வேண்டும்.   கற்க முடியாவிட்டாலும் ஒரு முறையாவது படித்துப் பார்க்க வேண்டும்.



ஸ்வாமி இராமானுசரைக் காட்டிக் கொடுத்த ஸ்வாமி மணவாள மாமுனிகளுக்கும், ஸ்வாமி மணவாள மாமுனிகள் மூலம் ஸ்வாமி இராமானுசரைக் காட்டிக் கொடுத்த வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளுக்கும், இற்றைக்கும் ஏறேழ்ப்பிறவிகும் தலையல்லால் கைமாறிலேனே.


                           



                             வாழியெதிராசன் வாழியெதிராசன்*
                             வாழியெதிராசனெனவாழ்த்துவார்*- வாழியென
                             வாழ்த்துவார் வாழியென வாழ்த்துவார்*தாளிணையில்
                             தாழ்த்துவார் விண்ணோர்தலை.



1 comment:

  1. Excellent narration and no words appropriate about the inner feelings and satisfaction

    ReplyDelete